Monday, February 4, 2008

வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பின்னடைவு : விவசாயிகள் ஒத்துழைப்பு இன்மையால் அதிர்ச்சி - தினமலர்

விவசாயிகள் ஒத்துழைப்பு இன்மையால், தமிழகத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.



தமிழகத்தில் மழையளவு குறைவதால், நிலத்தடி நீர் மட்டமும் குறைகிறது. இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி குறையும். இதை கருத்தில் கொண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.ஐந்தாயிரம் கோடி வீதம், ஐந்தாண்டுகளில் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ரூ.183 கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் பணி மேற்கொள்ள வேண்டும். ஒரு வேளாண் வட்டத்தில் குறைந்தது 50 ஏக்கர் நிலம் ஒரே பகுதியில் தேர்வு செய்ய வேண்டும். இந்நிலம், அதிகபட்சம் 12 விவசாயிகளுக்கு மேற்பட்ட நிலமாக இருக்கலாம். மூன்று வட்டத்தில் குறைந்தது 150 ஏக்கர் முதல் 200 ஏக்கர் நிலம் வரை தேர்வு செய்யலாம்.தேர்வான நிலம், வேளாண் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். நிலத்தில் குழாய்கிணறு அமைத்து, பழமரக் கன்றுகள், நெல்லி, மூலிகை மரக்கன்று, சவுக்கு, தைல மரக்கன்று போன்றவை நட்டு முறையாக பராமரிக்கப்படும். நிலம் அடர்ந்த தோப்பாக மாறியபின், விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.ஆரம்பத்தில், தரிசு நிலத்தில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்த முடிவானது. புஞ்சை நிலத்திலும் திட்டத்தை செயல்படுத்த வேளாண் துறை முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்குள், திட்டத்தை செயல்படுத்தி நிதியை செலவிட வேண்டும். இல்லையெனில், அந்நிதி அடுத்த ஆண்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.திட்டத்தை செயல்படுத்த வேளாண்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. விவசாயிகள் ஒத்துழைப்பு போதிய அளவில் இன்மையால் திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது பற்றி விவசாயிகள் கூறியதாவது:விளைநிலத்தை தோப்பாக மாற்றும் திட்டத்தால், ஆண்டுக்கு ஒருமுறை அதுவும் சீசன் காலத்தில் அறுவடை நடக்கும். அதில் குறைவான வருவாய் தான் கிடைக்கும். மழை கை கொடுக்கும் பட்சத்தில், மண் வளத்துக்கு ஏற்ப மானாவாரி பயிர் செய்தால் ஒரளவு லாபம் பார்க்கலாம்.நிலம் தோப்பாகி விட்டால், விவசாயிகள் அன்றாட உணவுக்கான காய்கறிகள் முதல், கால்நடை தீவனம் வரை அனைத்தையும் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இத்திட்டத்துக்கு, தரிசு நிலத்தையே தராதபோது, புஞ்சை நிலத்தை கொடுக்க வாய்ப்பில்லை.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.தமிழகத்தில் தேர்வு செய்த ஒன்பது மாவட்டத்திலும் இதே நிலை நீடிப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Saturday, February 2, 2008

தகவல் திரட்டுதல்

அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பின்னர் தான், என்னை விட பலபேர் நல்ல முறையில் இதனை அணுகியிருப்பதை காண முடிந்தது.

அவர்களுடைய பதிவுகளிலிருந்து சில நல்ல தகவல்களை பெற முடிந்தது.

1. http://agmarknet.nic.in/ - இங்கு அனைத்து வித விவசாய விளைபொருட்கள் விற்பனை சம்பந்தப் பட்ட விசயங்களை பெற முடிகிறது.
இதனுடைய தமிழக பிரிவின் அலுவலகம், Commissioner, Agricultural Marketing & Agri Business Directorate, Thiru Vi Ka Industrial Estate, Chennai-600032.
இ-மெயில் : amdtn@tn.nic.in மற்றும் agmarkbusiness@rediffmail.com
தொலைபேசி எண்கள் -044-22347484 , 044-22347485, 044-22347454(Fax)

2. http://gis.nic.in/agmarknet/home.asp - அரசு சார்ந்த இந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் திட்டங்களின் நோக்கம் நிறைவாக இருக்கின்றது. இதனுடைய தற்போதைய நிலை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் பல தகவல்கள் உண்டு... என்னுடைய "களத்துமேடு" பகுதியை பார்வையிடுங்கள்...

"தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்..." - என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப, முதல் கட்டமாக, தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

1. பிப்ரவரி - தகவல் திரட்டுதல்
2. மார்ச் - இணைய தள ஒருங்கிணைப்பு மற்றும் "உழைப்பு - பலன் (Cost-Benefit Analysis)" அடிப்படையில் தகுதிப் படுத்தல்.
3. ஏப்ரல் - ஒருங்கிணைந்த திட்டமிடல் (Integrated Planning)
4. மே - நேர்காணல் மற்றும் முதல் கட்டப் பணி செயல்படுத்தல். (களப்பணி - செல்லம்மாள் செந்தில்நாதன்)
5. ஜூன் - மாதிரி பண்ணை அமைத்தல் - செல்லம்மாள் செந்தில்நாதனின் முதலீடு
6. ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர்-அக்டோபர்- மாதிரி பண்ணையின் செயல்பாடுகளும், பயன்களும், லாபமும்...
7. நவம்பர் - மாதிரிப் பண்ணையின் அடிப்படையில், ஒரு கிராமத்தை தத்து எடுத்தல் - (களப்பணி - செல்லம்மாள் செந்தில்நாதன்)
8. தை -1, 2009 - வெற்றிகரமான மாதிரி கிராம அடிப்படையில், மற்ற கிராமங்களுக்கும் விழிப்புணர்வு அளித்து, ஊக்குவித்தல்...
9. இதனை தொடர்ந்து செயல்படுத்த ஒரு அமைப்பை உருவாக்குதல்


உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய தவறாதீர்கள்....

Monday, January 28, 2008

அரிசி, கோதுமை, காய்கறி உற்பத்தியில் இந்தியா சாதிக்கும் - தினமலர்


புதுடில்லி: மரபுவழி மாற்றியமைக்கப் பட்ட தொழில்நுட்பத்தின் (ஜி.எம்.,) மூலம் பருத்தி மட்டுமின்றி, ஜி.எம்.,அரிசி, கோதுமை, காய்கறிகள் உற்பத்தி செய்வதில்

சர்வதேச அளவில் இந்தியா இன்னும் இரண்டாண்டுகளில் சாதிக்கும்.இந்திய விவசாய, பயோடெக் துறையில் ஆய்வு செய்யும் பிரபல அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயத்தில் தொழில்நுட்பங்களை புகுத்தும் முயற்சி, இந்தியாவில் அதிக அளவில் நடந்து வருகிறது. விவசாயத்தில் `பயோடெக்னாஜி'யை அதிக அளவில் புகுத்தி, மரபுவழி உற்பத்தியை மாற்றியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வறண்ட நிலத்திலும், உப்பு நீரிலும் வளரும் வகையிலும் அரிசி உட்பட பல உணவு வகைகளின், வித்துக்களில் மரபு வழி மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் புகுத்தப்படுகிறது.

இந்தியாவில் அரிசி, கோதுமை, பருத்தி, காபி, புகையிலை, பழங்கள், காய்கறிகள் ஆகிய 17 வகை பயிர்களில், ஜி.எம்.,தொழில்நுட்பத்தை புகுத்தி, உற்பத்தியை பெருக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பூச்சிக்கொல்லிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது, வைரஸ் மற்றும் காளான் தாக்குதலை தடுப்பது, வறட்சியை தாங்குவது, வெள்ளம் பாதித்தாலும் சமாளித்து விளைச்சல் பாதிக்காமல் செய்வது, உப்பு நீராக இருந்தாலும், பயிர் விளைவிப்பது ஆகிய விஷயங்கள் குறித்து, மரபுவழி மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.அந்த வகையில், எதிர்காலத்தில் விவசாயம் செய்யப்படும்; விளைச்சலும் அதிகரிக்கும். பல மாநிலங்களிலும், மரபுவழி மாற்றியமைப்பு தொழில்நுட்பம் மூலம் பயிர்களை விளைவித்து ஆய்வுகள் நடந்துவருகின்றன.இப்போதுள்ள ஆய்வு முடிவுகளின் படி விவசாயம் மேற்கொள்ளப்பட்டால், வரும் 2010 ம் ஆண்டில், உலகில் இந்தியா தான் அதிக அளவில் ஜி.எம்.,அரிசி, கோதுமை, காய்கறிகளை விளைவிக்கும் நாடாக இருக்கும்; அதிக அளவில் ஏற்றுமதியையும் செய்யும்.இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, January 25, 2008

விவசாயம் - லாபம் மிக்க தொழில்

இந்தியாவின் இதயம் கிராமம்.
இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.

அடடா...

ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer...
மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,
விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...

தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...

நல்லது. இதனை எப்படி சாதிக்கப் போகிறோம்? என்னை விட இந்த விசயத்தை மிக நல்ல முறையில் பல பேர் அணுகியிருக்கலாம். ஆனாலும், எனக்கு தோன்றியதை சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.

1. விவசாயம் பெரும் பாலும் பாதிக்கப் படுவது மழை பொய்ப்பதும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீரழிவுகளாலும்தான். இந்த எதிர்பாரத விளைவுகளை, நஷ்டத்தை காப்பீடு (Insurance) செய்வதன் மூலம் தவிர்கலாம். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
2. வேளாண்மை பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் பயன், விவசாயியை சென்றடைய வேண்டும்.
3. பல்வேறு பணப்பயிர் (மூலிகை, ஆமணக்கு மற்றும் பிற ஏற்றுமதிக்கு உரிய பயிர்கள்) பற்றிய விவரங்கள் கிடைக்க வேண்டும்.
4. கிராமம் தோறும், விளை பொருட்களை விவசாயின் நேரடி விற்பணைக்கு எடுத்துச் செல்ல, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
5. ஒருங்கிணைந்த ஏற்றுமதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்
6. ஆண்டு முழுவதும் வருமானம் வரும்படி, ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு முறைகளில் அறிவியல் கலந்த, அதிகம் பலன் தரக் கூடிய முறைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக, ஒரு கிராமத்தை தத்து எடுத்து, சோதனை முறையில் செயல் படுத்தி, சாதனையாக்க வேண்டும்.

இதன் முன்னோட்டமாக, வரும் ஜுலை மாதம், முதன் முறையாக, வயல் (தோப்பு/காடு) வாங்குவதற்கு தயாராகி வருகிறேன்.

இங்கு, அமெரிக்காவில், அனைத்துமே நடைமுறையில் உள்ளது.

விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...

ம்ம்... அது அவ்வளவு சுலபமா? இது என்ன ரஜினி படமா? ஒரு பாட்டு முடியற நேரத்துல சாதிக்கிறதுக்கு...
ஆனா எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுதே... முடியும்னு...

ஈ.வே.இராமசாமி என்ற ஒரு தனி மனிதனின் மனதில், இந்த சமுதாய பொய்மைகளை கண்டு உருவான ஒரு தீப்பொரி தானே நமக்கு தந்தை பெரியாரை அடையாளம் காட்டியது, மூட நம்பிக்கைகளை சுட்டு பொசுக்கியது,

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற சாதாரண மனிதனுக்கு ஏற்பட்ட அவமானமும், அதனை தொடர்ந்து எழுந்த விடுதலை வேட்கையும், நமக்கு உலகமே கொண்டாடும் மாகாத்மா காந்தியை அடையாளம் காட்டியது. அஹிம்சையின் வலிமையை எடுத்து சொன்னது...

இதோ... இங்கு நான் மட்டும் இல்லை... இதை படிக்கும், நீங்களும் இணையும் போது, ஏன் முடியாது?