Saturday, February 2, 2008

தகவல் திரட்டுதல்

அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பின்னர் தான், என்னை விட பலபேர் நல்ல முறையில் இதனை அணுகியிருப்பதை காண முடிந்தது.

அவர்களுடைய பதிவுகளிலிருந்து சில நல்ல தகவல்களை பெற முடிந்தது.

1. http://agmarknet.nic.in/ - இங்கு அனைத்து வித விவசாய விளைபொருட்கள் விற்பனை சம்பந்தப் பட்ட விசயங்களை பெற முடிகிறது.
இதனுடைய தமிழக பிரிவின் அலுவலகம், Commissioner, Agricultural Marketing & Agri Business Directorate, Thiru Vi Ka Industrial Estate, Chennai-600032.
இ-மெயில் : amdtn@tn.nic.in மற்றும் agmarkbusiness@rediffmail.com
தொலைபேசி எண்கள் -044-22347484 , 044-22347485, 044-22347454(Fax)

2. http://gis.nic.in/agmarknet/home.asp - அரசு சார்ந்த இந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் திட்டங்களின் நோக்கம் நிறைவாக இருக்கின்றது. இதனுடைய தற்போதைய நிலை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் பல தகவல்கள் உண்டு... என்னுடைய "களத்துமேடு" பகுதியை பார்வையிடுங்கள்...

"தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்..." - என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப, முதல் கட்டமாக, தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

1. பிப்ரவரி - தகவல் திரட்டுதல்
2. மார்ச் - இணைய தள ஒருங்கிணைப்பு மற்றும் "உழைப்பு - பலன் (Cost-Benefit Analysis)" அடிப்படையில் தகுதிப் படுத்தல்.
3. ஏப்ரல் - ஒருங்கிணைந்த திட்டமிடல் (Integrated Planning)
4. மே - நேர்காணல் மற்றும் முதல் கட்டப் பணி செயல்படுத்தல். (களப்பணி - செல்லம்மாள் செந்தில்நாதன்)
5. ஜூன் - மாதிரி பண்ணை அமைத்தல் - செல்லம்மாள் செந்தில்நாதனின் முதலீடு
6. ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர்-அக்டோபர்- மாதிரி பண்ணையின் செயல்பாடுகளும், பயன்களும், லாபமும்...
7. நவம்பர் - மாதிரிப் பண்ணையின் அடிப்படையில், ஒரு கிராமத்தை தத்து எடுத்தல் - (களப்பணி - செல்லம்மாள் செந்தில்நாதன்)
8. தை -1, 2009 - வெற்றிகரமான மாதிரி கிராம அடிப்படையில், மற்ற கிராமங்களுக்கும் விழிப்புணர்வு அளித்து, ஊக்குவித்தல்...
9. இதனை தொடர்ந்து செயல்படுத்த ஒரு அமைப்பை உருவாக்குதல்


உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய தவறாதீர்கள்....

16 comments:

சதுக்க பூதம் said...

உண்மையிலே மிக நல்ல முயற்ச்சி. வெற்றிக்கு வாழ்த்துக்கள். என்னுடைய மின்னஞ்சல் sathukapootham@yahoo.com.I saw the video clipping. It is really amazing. I do have some contact with NGO working in agriculture technology area.( I too have the same as medium term goal(starting model farm))

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

நண்பர் சதுக்க பூதம்,

இன்னும் ஒரு மாத காலத்திற்கு, தகவல் சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்.
ஒத்த எண்ணம் கொண்ட உங்களை கண்டதில், எனக்கு மித்த மகிழ்ச்சி...
தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்... விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...

நன்றிகள் பல...

மா சிவகுமார் said...

மிக்க மகிழ்ச்சி அம்மா!

பயிர் முயற்சியை ஆரம்பித்து பல மாதங்களாக கவனம் சரியாக செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பணியில் நான் என்ன செய்ய வேண்டும் என்று உரிமையுடன் உத்தவரவு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
இங்கிருந்து எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
செந்தில்நாதன் செல்லம்மாள் said...

தோழர் சதுக்க பூதம், மா.சிவகுமார் மற்றும் வடுவூர் குமார்,

உங்களுடைய அற்புதமான ஆதரவு, மிக்க மகிழ்ச்சி !!!

இப்பொழுதைக்கு அனைத்து தகவல்களையும் திரட்டிக் கொள்ள வேண்டும். பல பிரச்சனைகளையும், விவசாயிகளின் சவால்களையும் முறைப் படுத்திய பின்னர், அதனுடைய தீர்வுகளையும் ஆராய்ந்து, ஒரு தெளிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். ஏற்கனவே பல வலைப்பூக்களில், இதனை பற்றி விலாவாரியாக விவாதித்துள்ளனர். தகவல் சேகரிப்பின் ஒரு பகுதியாக, TNAU -விலும் தொடர்பு கொள்ளப் போகிறேன். இந்த மாத இறுதிக்குள் இதை செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறேன்.

நண்பர்களே, நீங்கள் எங்கேயாவது நமது இந்த முயற்சிக்கான தகவல் கிடைப்பின், இணையதளம் இருப்பின் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சதுக்க பூதம் - உங்களுடைய அரசு சாரா பொது நல அமைப்புகளின் தொடர்பு மிக அவசியமானது. திட்ட அறிக்கை, தயாரித்தவுடன், அவர்களின் உதவியினை நாட வேண்டியிருக்கும். அவர்களின் வேளாந்துறை சம்பந்தப் பட்ட அறிவு மிக அவசியம்.

மா.சிவகுமார் - நமது இணையதளம் முன்னோட்டமாக, இந்த செயல் திட்டம் ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டியவுடன், ஒரு தனி இணையதளத்தை ஆரம்பித்து, மாதிரி பண்ணையின் செயல் பாடுகளையும், திட்ட முன்னேற்றங்களையும் உடனுக்குடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன். அதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டவுடன், அந்த கனவு இணையதளத்தை அமைத்திட வேண்டும்.

வடுவூர் குமார்- நீங்கள் சிங்கபூரில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க நன்று. உங்களால், சிங்கபூரிலோ அல்லது மலேசியாவிலோ ஏதேனும் முறைப்படுத்தப் பட்ட வேளாண்மை மற்றும் அது சம்பந்தப் பட்ட, நல்ல விசயங்கள் கிடைப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்... (மன்னிக்கவும்... உங்களுடைய பின்னூட்டம் வலைப்பூவில் வரவில்லை. எனவே அனானியாக பதிவு செய்தேன்...)
மிக்க நன்றி....

manjoorraja said...

மிகவும் முக்கியமான நாட்டிற்கு தேவையான விவசாயத்தில் புரட்சி செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தொடங்கியுள்ள உங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

பதிவின் முக்கியத்துவம் கருதி இந்த பதிவு முத்தமிழ் கூகிள் குழுமத்தில் மீள்பதிவு செய்யப்படுகிறது. நன்றி.

http://groups.google.com/group/muththamiz

அக்னி சிறகு said...

பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும்போது நிறைய வயல் வெளிகளை பார்க்கும் போதெல்லாம் எப்படியெல்லாம் விவசாயத்தை லாபகரமான தொழிலாக்குவதென சிந்திப்பேன். அப்பொழுதெல்லாம் என் நினைவுக்கு வருவது ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதுதான்.

வெளி நாடுகளில் ஒரு விவசாயிக்கு சொந்தமாக பல ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் நடக்கும். ஆனால் இங்கே நிலைமை தலை கீழ். ஏனெனில் நம் தேசத்தின் மக்கள் தொகை அப்படி. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கரிலெல்லாம் ஒன்றும் சாதிக்க முடியாது. மேலும் நில உச்சவரம்பின்படி 15 ஏக்கருக்கு மேல் ஒரு விவசாயிக்கு சொந்தமாக இருக்க முடியாது. என்ன செய்யலாம் என்று சிந்தித்த போது உதிப்பது 'கூட்டுறவே நாட்டுயர்வு' என்னும் பொன்மொழியே.

கூட்டுறவு விவசாய பண்ணை ஒன்று குறைந்தது 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தது அந்த பண்ணை 10 கி.மீ க்கு 10 கி.மீ. (100 ச.கி.மீ) அளவு கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் கூட்டுறவு முறை பண்ணைகளுக்கு எனக்கு தெரிந்த வரையில் எதுவும் உச்சவரம்பில்லை. இது குறித்து விசாரித்தும் அறிந்து கொள்ளலாம்.

இதனால் உண்டாகும் நன்மைகள்

வேலை வாய்ப்பு:

விவசாய கூலிப்பணிக்கு இப்பொழுது ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே இயந்திரங்கள் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இயந்திரம் பயன்படுத்துவதென்பது குறைந்த அளவுள்ள நிலங்களுக்கு லாபகரமான ஒன்றல்ல. இந்த முறை பண்ணையில் பண்ணைக்கு நிலமளித்த விவசாயிகளையே வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்த முடியும்.

உதாரணமாக ஒரு குழு இயற்கை உரம் தயாரிப்பில் ஈடுபடலாம். ஒரு குழு நீர் நிலை ஆதாரங்களை பராமரிக்கலாம். ஒரு குழு விவசாயத்தின் ஆதார(core) பணிகளை கவனிக்கலாம். ஒரு குழு இயந்திரங்களை இயக்கலாம். ஒரு குழு அந்த இயந்திரங்களை பராமரிக்கலாம். ஒரு குழு விவசாயத்திற்கு பிறகான விற்பனை பணிகளை செய்யலாம். ஒரு குழு விவசாயத்திற்கு தேவையான தரமான மூலப்பொருள்களை குறைந்த விலையில் பெற முயற்சிக்கலாம். இதற்கெல்லாம் விவசாயிகளுக்கு மாத சம்பளம் கொடுக்கலாம். அதற்கு மேல் வருடா வருடம் கூட்டுறவு பண்ணைக்கு பங்களித்த விவசாயிகளுக்கு லாபத்தை பகிர்ந்தளிக்கலாம். இதனால் விவசாயிகளுக்கு இரட்டை வருமானம் வருடா வருடம் கிடைக்கும். மேலும் பல விவசாயிகளுக்கான நலப்பணிகளையும் பண்ணையின் வருமானத்திலேயே அரசின் கைகளை நம்பாமல் நிறைவேற்ற முடியும்.


நீர் ஆதார நிர்வாகம்

நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் சிறிய சிறிய நிலங்களாக இருப்பதால் ஏராளமான நீர் விரயம் ஏற்படுகிறது. மக்களும் நீர்நிலைகளை பராமரிக்க நிறைய செலவு செய்ய இயலாமல் எல்லாவற்றிற்கும் அரசின் ஆதரவை நம்பியுள்ளனர். இதனால் ஏரிகள் இருந்தும் அதில் போதிய அளவு நீர் இருந்தும் விரயம் காரணமாக நீர் ஏராளமாக வீணாகி 1 அல்லது 2 போகம் குறைவாகவே விவசாயம் நடக்கிறது. விவசாயப்பண்ணை அமைக்கும் போது அந்த பண்ணைக்கென நீர் நிலையை அங்கேயே உருவாக்கப்பட்டு அது திறம்பட பண்ணையாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும் மிகவும் திறன் மிக்க தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நீரின் பயன்பாட்டு முறைகளை மாற்றியமைப்பதின் மூலம் வருடம் முழுவதுமான விவசாயத்திற்கு ஏற்றபடி நீர் நிலையை வடிவமைக்க மற்றும் பராமரிப்பது தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமானதே. மேலும் கூட்டுறவு விவசாய பண்ணை என்பதால் பராமரிப்பிற்கான நிதி ஆதாரம் அந்த பண்ணையாலேயே உருவாக்கப்படுவதோ பெறப்படுவதோ எளிது.


நிதி நிர்வாகம்

விவசாயிகளுக்கு கடன் அளித்து பின்னர் அவற்றை நட்டம் அல்லது இயற்கை பேரழிவின் போது ஏற்படும் இழப்புகளின்போது அந்த கடனை ரத்து செய்வதால் அரசுக்கு தொடர்ந்த இழப்பு ஏற்படுகிறது. அதை தவிர்த்து பண்ணைக்கு தேவையான நிதி ஆதாரத்தை வங்கிகளின் மூலம் குறைந்த வட்டிக்கு கொடுக்கலாம். இந்த இயற்கை இழப்புகளை பண்ணை காப்பீடு முறைமூலம் பண்ணையே சமாளிக்கலாம்.


தொழில் நுட்பம்

நாட்டில் நிறைய விவசாய பட்டதாரிகள் உள்ளனர். அவர்களையெல்லாம் திறம்பட உபயோகிக்க அரசின் உதவி தேவைப்படுகிறது. அவர்களை பண்ணை முறையில் பயன்படுத்தும்போது அவர்கள் சிறந்த தொழில்நுட்பங்களை பண்ணைக்கு அளிப்பதுடன் அவர்களே சிறந்த புதிய தொழில்நுட்பங்களை கண்டறியவும் பண்ணைகள் உதவும். இதற்கெல்லாம் அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டாம். பண்ணைகளே சுயமாக சமாளித்துவிடும்.


இன்னும் நிறைய சிந்தனைகள் தோன்றும். அவற்றில் சில மட்டுமே இதை தட்டச்சிடும்போது மனதில் வந்தன. இன்னும் பல நன்மைகளை கூட்டுறவு விவசாயத்தின் மூலம் பெற முடியும். தோன்றும்போதெல்லாம் சொல்கிறேன். ஆனால் இவற்றையெல்லாம் முதன்முதலில் சாத்தியப்படுத்த பகீரத முயற்சி தேவை. அதற்கு நிச்சயம் அரசின் ஒருங்கிணைக்கும் உதவி தேவை. ஒரு பண்ணை வெற்றிகரமாக செயல்பட்டுவிட்டால் பின்னர் நிறைய பண்ணைகள் தானாகவே உருவாகும். அதனால் நிறைய நன்மைகள் ஏற்படும்.

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

மஞ்சூர் ராசா மற்றும் அக்னி சிறகு,
தங்களின் வருகைக்கு நன்றி.

அக்னி சிறகு, மிகச் சரியாக சொன்னீர்கள். கூட்டுறவு பண்ணைமுறை விவசாயம் மிகச் சிறந்தது. எனக்கும் இதே எண்ணம் உண்டு. நல்ல தகவல்.

sweetsuresh said...

வணக்கம்!

நான் சுரேஷ்பாபு. ஒரு விவசாயி. விவசாயத்தை லாபம் பார்க்காமல், அதை மனதிருப்திக்காக செய்து வருபவன். எனக்கும் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நாமும் நம் பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

அதற்கான திட்டங்களை நீண்டகால அடிப்படையில் யோசித்து வருகிறேன். உங்கள் வலைப்பூவைப் பார்த்ததில் மகிழ்ச்சி

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

நண்பர் சுரேஸ்பாபு,
உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிரேன்.
நண்பர் கருப்பர், இன்னொரு பதிவிற்கு அளித்த பின்னூட்டத்தை, அதன் முக்கியத்தும் கருதி இங்கு பதிக்கிரேன்...
நண்பர் கருப்பா,
மிகச் சிறந்த பின்னூட்டம். அருமையான விமர்சனம். தங்களுடய உதவி கட்டாயம் தேவை... எனது பதில்களை இங்கு பதிக்கிறேன்... குறை இருப்பின், கட்டாயமாக சுட்டிக் காட்டுங்கள்..

////// கருப்பர் கூறியது...---> தங்கள் கருத்து மற்றிலும் தவறான ஒன்று. விவசாயத்திற்கு முக்கிய பிரச்சனை நீர் இல்லாதது தான்!! மழை என்பது விவசாயிகளின் கனவு... பயிர்களை சேதப்படுத்துமளவு மழை பெய்து வெள்ளம் வருவது 10 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பது. வரட்சியால் பயிர்கள் நாசமாவது வருடா வருடம் நடப்பது! மழைநீரை சேமிப்பதுதான் நல்ல விவசாயத்திற்கு அடிப்படை. வெள்ளங்களால் பாதிக்கப்படும் நிலங்கள் பெரும்பாலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும். இப்படிப்பட்ட இடங்கள் ஆற்றங்கறைகள், ஏரிகள், குளங்களை ஆக்ரமித்து விவசாயம் செய்யப்படுபவை. இதற்கெல்லாம் Insurance கொடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான்! ///////////
எனது பதில்...
1. நண்பரே, மழை அதிகம் பெய்து வெள்ளம் வந்தாலும் அல்லது மழை பொய்த்தாலும் காப்பீடு உங்களுக்கு கை கொடுக்கும். இப்பொழுது, காப்பீடு என்பது மழை அளவினை குறியீடாகக் கொண்டு வழங்கப் படுகிறது. எனவே, நீங்கள் காப்பீடு செய்வதன் மூலம், இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் பாது காத்துக் கொள்ளலாம்.
2. ஆற்றங்கறைகள், ஏரிகள், குளங்களை ஆக்ரமித்து விவசாயம் செய்யப்படுவது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத சமுதாயக் குற்றம் ஆகும். அவர்களை விவசாயி என்று சொல்வதை விட தீவிரவாதிகள் என்று சொல்லலாம். இது பசிக்காக, தனது சதையையே தின்னும் அவலம்.

////// கருப்பர் கூறியது...---> விவசாயிகளின் இன்னொரு முக்கிய பிரச்சனையான வேளையாள் பஞ்சம்(Scarcity of Labor) பற்றி நீங்கள் பேசவேயில்லை. ///////////
எனது பதில்...
1. வேளையாள் பஞ்சத்திற்கு காரணம், விவசாயம் நட்டப்படும் தொழிலாகவும், வருடம் முழுவதும் வேலை தர முடியாத தொழிலாகவும் இருப்பது தான். ஒரு கூட்டு பண்ணைமுறை விவசாயம் ஏற்படும் போது, அமெரிக்காவினைப் போல, நமது ஊரிலும் விவசாய கருவிகளை குறைவான வாடகையில் கிடைக்கச் செய்யலாம். மேலும், விவசாயம் லாபமான தொழிலாக மாறும் பட்சத்தில், மீண்டும் வேலை ஆட்கள் வருவார்கள். இது கனவு தான். ஆனால், ஒரு நாள் சாத்தியப் படும்.

////// கருப்பர் கூறியது...---> கிராமம் தோறும், விளை பொருட்களை விவசாயின் நேரடி விற்பணைக்கு எடுத்துச் செல்ல, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
//விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக விற்பனைக்கு எடுத்துச்சென்றால் கிடைக்கும் லாபத்தின் அளவு மிகவும் சொற்பமாகும். இந்த சொற்ப லாபத்தை பெறுவதற்காக அவர்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது... அதற்காகவே இவர்கள் இடைத்தரகர்களிடம் விற்பதை ஏற்றுக்கொள்கின்றனர். ///////////

எனது பதில்...
1. இது நிதர்சனமான உண்மை. இதற்கான மாற்று வழிகள் பற்றிய தகவலை சேகரிக்க ஆரம்பித்துள்ளேன். கூடிய விரைவில், திட்ட அறிக்கையில் சமர்பிப்பேன்.

சதுக்க பூதம் said...

I am going to india this month end. I can contact my friends and can give you usefull information. I do have friends in National Agro foundation(It was started by C.Subramaniam for the upliftment of small and marginal farmers) and Agricultural collages(chidambaram,madurai,etc) and in some KVK's. Please let me know what ever help you need.

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

சதுக்க பூதம் Sir,

Thank you so much. I will send you a mail. Hope, by month end, I should have enough information to discuss with your contacts,,,

If needed, I would like to call you.

Have a happy journey...

வின்சென்ட். said...

திருமதி.செல்லம்மாள்

பயனுள்ள உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நான் கோவையில் இருப்பவன் எனவே உங்கள் முயற்சிக்கு உதவமுடியும்.

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

நண்பர் வின்சென்ட்,

மிக்க நன்றி. உங்களுடைய உதவி கட்டாயம் தேவை....
உங்களுடைய மேலான கருத்துக்களை பதியுங்கள்...

Kannan said...

பண்ணை: palpannaiblogspot.com